சென்னை காவல்துறைக்கு வயசு 150



தென்னிந்தியாவில் வாசலான சென்னையின் மாநகர காவல்துறை தன் 150 வருடத்தை ஜனவரி 4-ல் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருவது தெரிந்ததே. இதன் ஏற்பாடுகள் நடந்து வந்தாலும், காவல்துறைக்கு பொதுமக்கள் மத்தியில் எந்த விதமான மதிப்பு இருக்கிறது என்று பார்த்தால், நிலைமை சொல்லிக் கொள்கிறார் போல இல்லை தான். ஆனால், கடந்த 2-3 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையோடு ஒப்பிட்டு பார்த்தால், நிலைமை பொதுவாக ஒரு முன்னேற்றம் காணாப்படுகிறது என்றே சொல்லலாம்.

பெரும்பாலும் காவல் துறையின் மீது சொல்லப்படும் குற்றங்கள் லஞ்சம், முரட்டுத்தனம் என்று பல குற்றச்சாட்டுக்கள். 70 இலட்சம் மக்கள் தொகை கொண்ட நகரம். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24000+ மக்கள் வசிக்கின்றனர். பொது மக்களின் நண்பனாக இருக்க வேண்டிய காவல்துறை மக்களின் வில்லனாகிப் போனது வேதனை தான்.

"ஒரு போலீஸ் என்ன துரத்தி வந்துச்சு"
"அப்புறம்?"
"நல்ல வேளை. ஒரு ரெளடி என்னை காப்பாற்றினான்"

- போன்ற துணுக்குகள் சர்வ சாதா'ரண'மாக வெளிவந்துக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் தான் முன்னாள் அதிரடிப்படைத் தலைவரான நடராஜ் சென்னை காவல்துறை ஆணையளராக பதவி ஏற்றார். நட்ராஜ் காலகட்டத்தில் சில என்கவுன்டர்கள் நடந்தன. சென்னையில் தாதாக்களின் கொட்டங்கள் அடக்கி வைக்கப்பட்டன. (விருமாண்டி படத்தை பார்த்து, காவல்துறையினர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கடா மீசை வைத்தவர்).

பின் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை (பர்சனலாக) புகழ்ந்து பேசி வைக்க, அதன் பின் தேர்தல் ஆணையத்துடன் நடந்த மோதலில் அவர் மாற்றப்பட்டார். அப்பொழுது பதவி ஏற்றவர் தான் இப்பொழுது இருக்கும் ஆணையாளார் லத்திகா சரண். இவர் தான் பெருமைமிகு சென்னையின் முதல் பெண் கமிஷனர். ஆட்சி மாறியதும் வழக்கம் போல கமிஷனரும் மாற்றப்படுவார் என்ற பழைய சித்தாந்த்தத்தை உடைப்பெற்று லத்திகா சரணே தொடர்ந்து கமிஷனராக தொடர்ந்தார். இது காவல்துறை அரசியல் கலப்பில்லாமல் 'காட்டிக்கொள்ளப்பட' ஒரு வாய்ப்பாக அமைந்தது. இவர் காலகட்டத்தில் காவல்துறை கொஞ்சம் சுதந்திரமாகவே செயல்பட்டது எனலாம், அதாவது, முன்பிருந்ததை விட. அதேபோல தண்ணிச்சையாக முடிவெடுக்கும் உரிமையும் பெற்றது.



லத்திகா சரண் வந்ததும், முன்பிருந்த நட்ராஜின் ரூட்டையே ஃபாலோ பன்னினார் எனலாம். வரிசையாக என்கவுன்டர்கள். அதன் பயனாக தாதாக்களின் கொட்டம் அடங்கியது. வீரமணி முதல் ஃபங்க் (funk, bunk அல்ல) குமார் வரை நடத்தப்பட்ட என்கவுன்டர்கள், காவல்துறை தன்னுடைய ஹீரோயிசத்தை காட்டியது. இதற்கு முக்கியமான ஒரு காரணம் காவல்துறையின் டீம்.

சைலேந்திர பாபு, வட சென்னை காவல்துறை ஆணையர் ரவி, கூடுதல் ஆணையர் ஜாங்கிட் போன்றவர்களை தேடி கண்டுபிடித்து ஒரு டீம் ஆக்கப்பட்டது. விஜயகுமார் இதில் ஒரு முக்கியமான நபர். ஜாங்கிட் வட மாநில கொள்ளையர்களை அவர் மாநிலத்திற்கு சென்று திறமையாக விசாரனை செய்து பிடித்து வந்தவர். பின் அவர் சென்னை காவல்துறையில் சேர்க்கப்பட்டார்.

காவல்துறையில் நடந்து வரும் மாற்றங்கள்.

* முக்கியமானது, பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைப்பது. ஒரு போலீஸ் அதிகாரி இவ்வாறு கூறினார், "நாங்கள் திருந்த தயாராக இருக்கிறோம். எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்", கூடியிருந்த பொதுமக்களின் அப்லாஸுடன்.

* காவல்துறையினரை பார்த்து பயப்படாமல், அவர்களும் தம் நண்பர்கள் தாம் என்ற எண்ணம் வரவழைப்பது. (இதற்காக சில நாட்களுக்கு முன் காவல்நிலையங்களின் வண்ணத்தை சிகப்பில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாற்றினார்கள்).

* இன்றும் இரவில் இரண்டாம் ஷிஃப்ட் முடிந்து செல்கையிலும், பின் தூக்கம் வராமல் தேநீர் குடிக்க அதிகாலை 4 மணி வாக்கில் வெளியே வந்தால், நான் இருக்கும் ஏரியாவில் ரோந்து போலீஸ் இருப்பதை பார்க்கலாம்.

* முக்கியமாக, போக்குவரத்து காவலர்களின் கண்ணியம். நான் கண்டது. வழக்கமாக வண்டி ஓட்டும் பொழுது கைபேசியில் அழைப்பு வந்தால் ஓரமாக வண்டியை நிறுத்தி பேசுவேன். ஒரு முறை ரயிலுக்கு நேரமானதால், வண்டி ஓட்டிக் கொண்டே பேசிக்கொண்டு வந்தேன். ஒரு போலீஸ் "செல்ஃபோன் டிரைவிங்கா? எப்படி கண்டிபிடிச்சேன் பார்த்தீயா?" என்று சந்தோஷத்தில் என்னை ஓரங்கட்டினார். அங்கிருந்த அதிகாரி எனக்கு அபராதம் போட்டு, அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விட்டார். "உன் கூட பேசின ஃபிரண்டு ஆஸ்பத்திரியில் வந்து சில பழங்கள் பிஸ்கட்ட கொடுத்துட்டு போயிடுவான். வலியை அனுபவிக்கிறது நீ தான. எத்தனை தடவ சொன்னாலும் திருந்த மாட்டேங்கரீங்க. பட்டபிறது திருந்த முடியாம போயுடும்".

* இப்பொழுதெல்லாம் சாலையை கடக்க உதவும் முதியோர்களை, காவலர்கள் கூட சென்று சாலையை பத்திரமாக கடக்க உதவுகிறார்கள்.

* விபத்து நடந்த இடத்தில், ஒருவருக்கு ஆசுவாசப்படுத்த ஒரு பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து அவர் காலை கழுவி மசாஜ் செய்தார் ஒரு காவலர்.

* சமீபத்தில் அர்விந்த் கொலையில், கொலையை தடுக்க முடியவில்லையென்றாலும் (8:30க்கே கொலை செய்யப்பட்டுவிட்டான், ஆனால் ரவிக்கு தகவல் வந்தது 9 மணிக்கே. அதுவும் அரவிந்த் பெற்றோர் அல்ல. அவர் குடும்பத்தினருக்கு தெரிந்த ஒரு நபர் பேசினார். ஆனால், அரவிந்த் வீட்டின் முகவரி கூட அவரால் கொடுக்க முடியவில்லை), தென் சென்னை இணை ஆணையர் துரைராஜ் தலைமையிலான படை 2 நாட்களில் கொலையாளிகளை பிடித்து விட்டனர்.

* இன்னும் முக்கியமான ஒரு படை, சென்னை காவல் சைபர்கிரம் பிரிவு. பல வழக்குகளில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி வாங்கித் தந்திருக்கிறது இந்த பிரிவு. உண்மையிலேயே சபாஷ் போட வேண்டிய பிரிவு இது.

* அபிராமி தியேட்டர் ராமநாதன் சென்னை காவல் துறையினரின் செயலை பாராட்டும் விதமாக இரு சினிமாவை எடுத்து இருக்கிறார். படத்தில் நடித்த எல்லோருமே நிஜ காவல் துறையினர் என்பது கூடுதல் தகவல். அப்படம் இன்றைய கொண்டாட்டத்தில் திரையிடப்படுகிறது. நாளை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி அப்துல் கலாம் சென்னை வருகிறார்.


சரி! சென்னை காவல்துறை என்ன மகான்கள் இருக்கிற துறையா என்று கேட்பவர்களுக்கு...மகான்கள் இருக்கிற துறை இல்லை தான், ஆனால் நல்லவற்றை தட்டிக் கொடுப்பது அவர்களை ஊக்கப்படுத்துவதாக அமையும் அல்லவா? காவலர் வேலை வெறும் சம்பள வேலையாக இல்லாமல், அது ஒரு பெருமைமிகு கடமை என்று பொதுமக்களாகிய நாம் தான் உணர வைக்கவேண்டும்.

இருண்ட காட்டுக்குள் இருக்கிறீர்கள். ஒரு தீக்குச்சி இருந்தால் எங்கிருக்கும் எல்லா விளக்கையும் ஏற்றி விடலாம் தான். ஆனால் அந்த முதல் தீக்குச்சியை தேடி எடுப்பது தான் சவால். அந்த முதல் தீக்குச்சியைத் தான் தேடிக்கொண்டிருக்கிறது சென்னை காவல் துறை.
--
ஆக்கம்:- சீனு.

(அவர் பீட்டாவுக்கு மாறாததினால் என்னால் பதியப்படுகிறது.)

Comments

Jay said…
சென்னைக் காவல் துறையை வில்லனாக தமிழகத்திற்கு வெளியே தெரியக் காரணம் தமிழ் திரைப்படங்கள்தான். ஆனால் இப்போ திரைப்படங்களில் மட்டுமல்ல உங்கள் உள்ளங்களிலும் காவல்துறை ஹீரே ஆகத்தொடங்கியுள்ளது என்பதை இந்தப்பதிவை வாசிக்கும் போதே புரிகின்றது..
ரவி said…
தலையை சொறிவதையும், முன்னால் தள்ளி நிற்கும் தொப்பையையும் மறைக்க முடியும் என்று தோன்றவில்லை...காலங்காலமாக ஊறிப்போன - புரையோடிப்போன விஷயங்கள் !!!
சமீபத்தில் 1959-ஆம் ஆண்டு போலீஸ் 100 ஆண்டு விழாவைக் கொண்டாடினார்கள். அச்சமயம் அப்போதைய போலீஸ் கமிஷனர் பொன் பரமகுரு அவர்கள் இயக்கத்தில் எடுக்கப்பட்ட "உங்கள் நண்பன்" என்ற படம் ரொம்ப நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்தக் கணக்குப்படி 2009-ல் அல்லவா 150 ஆண்டு பூர்த்தியாகிறது? இப்போது எப்படி?

அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்தப் பதிவை அறிமுகப்படுத்திய ப்ரியனுக்கு நன்றி :-)

இந்தக் கட்டுரை வாசித்ததும் ஒரு சிறிய மகிழ்ச்சி வருகிறது.

//காவலர் வேலை வெறும் சம்பள வேலையாக இல்லாமல், அது ஒரு பெருமைமிகு கடமை என்று பொதுமக்களாகிய நாம் தான் உணர வைக்கவேண்டும்.//

ஆம், இது ஒரு பெருமை மிகு கடமை தான். வெளிநாடுகள் சிலவற்றில் நிலவும் இக்கருத்தை இந்தியக் காவல் துறையும் சம்பாதிக்கவேண்டும். அமெரிக்காவில் போலீசார் ஒரு நண்பனைப் போல. ஆபத்து என்றால் அங்கே ஒரு போலீசார் வந்தால் போதும், நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

அதிலும் தீயணைப்புப் படையினரிடம் குழந்தைகளுக்குக் கூட ஒரு தனி ஈர்ப்பு உண்டு. "நீ வளர்ந்து பெரியவனானதும் என்ன ஆகப்போகிறாய்?" என்று மூன்று வயதுச் சிறுவனைக் கேட்டால் கூட ஏராளமான சிறுவர்களிடமிருந்து கிடைக்கும் பதில் "நான் ஒரு fireman/firefighter ஆகப்போறேன்!" என்பதே. அந்த அளவுக்குக் காவல் துறையும் தீயணைப்புத் துறையும் மக்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.
சோமி said…
உண்மைதான் காவல்துறையின் சேவையை பாராட்டமலும் இருக்க முடிய வில்லை. இரவு நேரங்களில் பெண்கள் உட்பட யாரும் எத்தினை மணிக்கும் செல்லக் கூடிய ஒரு சூழல் உருவாகியிருகிறது.
இரவில பிடிபட்டால் பெரும்பாலும் லஞ்சம் கூட காவல் துறை வாங்குவதில்லயென்றால் பார்த்துகொள்ளுங்களேன்.அபராதம் கட்டும் படி சொல்கிறார்கள் இதைவிட அட்வைஸ் வேறு இலவசமாக தருகிறார்கள்.
சினிமாவில் காட்டும் அளவுக்கு கேவலமாக இல்லையென்றாலும் தமிழர்களின் மந்தியில் காமடியன்களாகவே காவல் துறையினர் இன்னமும் இருகிறார்கள்.
சீனு said…
//தலையை சொறிவதையும், முன்னால் தள்ளி நிற்கும் தொப்பையையும் மறைக்க முடியும் என்று தோன்றவில்லை...காலங்காலமாக ஊறிப்போன - புரையோடிப்போன விஷயங்கள் !!!//
எம்.ஜி.ஆர் ஸ்டைலில் "மாற்றம் ஒன்று தானே ரவி உலகில் மாறாதது..."

//வெளிநாடுகள் சிலவற்றில் நிலவும் இக்கருத்தை இந்தியக் காவல் துறையும் சம்பாதிக்கவேண்டும். அமெரிக்காவில் போலீசார் ஒரு நண்பனைப் போல.//

இதற்கு முக்கியமான காரணம் பொருளாதார சூழ்நிலை. அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெற்றால் மற்றவை தானாக நடக்கும். அவர்களுக்கும் தத்தமது பிள்ளைகள் நல்ல பள்ளிகளில் படிக்க வேண்டும், மற்றவர்களைப் போல வசதியாக வாழவேண்டும் என்ற எண்ணமே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். பொருளாதார வளர்ச்சி காரணமாக, இவை ஓரளவு இப்பொழுது நடக்கப்பெற்று வருகின்றன.

இவைகளை தாண்டி, முக்கியமாக, சாதாரண காவலர்கள் வேலையாட்களைப் போல நடத்தப்படாமல் ('யோவ் 302! ஒரு டீ சொல்லுய்யா...') அவர்களுக்கும் மரியாதை அளிக்கவேண்டும் என்று சென்னை மாநகர கமிஷனர் வலியுருத்தியுள்ளார். நியாயம் தானே. அவர்களும் மனிதர்கள் தாம்.

//ஆபத்து என்றால் அங்கே ஒரு போலீசார் வந்தால் போதும், நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.//


//இரவு நேரங்களில் பெண்கள் உட்பட யாரும் எத்தினை மணிக்கும் செல்லக் கூடிய ஒரு சூழல் உருவாகியிருகிறது.//
இதற்கு மற்றுமொரு முக்கியமான காரணம், ஐ.டி. மற்றும் ஃபி.பி.ஓ ஆகியவைகளை சொல்லலாம். இப்பொழுது பகலைப் போல இரவு வாழ்க்கைக்கும் கணிசமான மக்கள் கிடைத்திருக்கின்றனர் :) இந்த இரவு வாழ்க்கையினால் (மும்பையில்) இரவில் திருட்டு பயமும் குறைந்துள்ளது. அது தான் தற்போது சென்னையிலும் நடக்கிறது.

என் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு தேநீர் கடையில் எப்பொழுது போனாலும் டீ கிடைக்கும். இரவில் 3-6 மணிக்கு கூட கணிசமான கூட்டம் இருக்கும். இதனால் தெருக்களில் பொதுமக்களின் நடமாட்டம் இருக்கிறது.
சீனு said…
http://www.kumudam.com/magazine/Kumudam/2008-10-29/pg3.php

சென்னை புறநகர்ப் பகுதி மக்கள் மகிழ்ச்சியிலிருக்கிறார்கள். இரண்டு காரணங்கள். ஒன்று அவர்களுக்கென்று தனியாக போலீஸ் கமிஷனரகம் அமைக்கப்பட்டிருப்பது. இரண்டாவது, அந்த கமிஷனரகத்துக்குத் திறமை வாய்ந்த அதிகாரி கமிஷனராக வந்திருப்பது. மக்களின் மனம் கவர்ந்த அந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஜாங்கிட். சென்னையைச் சுற்றி ஐநூற்று ஐம்பது கிலோமீட்டர் பரப்பிலிருக்கும் ஐம்பது லட்சம் மக்களின் பாதுகாப்பு இவரது கரங்களில்.

``புது கமிஷனர் ரொம்ப சுறுசுறுப்பாய் இருக்கிறார். போலீஸ்னாலே முன்னால பயமாயிருக்கும். இப்போது பயம் போய், அவர்கள் நமது நண்பர்கள் என்ற உணர்வு வந்திருக்கிறது'' என்கிறார் பாபு என்ற உள்ளூர்வாசி. அவர் அப்படிச் சொல்வதற்கு அடிப்படையாக இரண்டு மூன்று சங்கதிகள் இருக்கின்றன. இந்தப் புறநகர்ப் பகுதியில் மொத்தம் 39 காவல்நிலையங்களும் 8 மகளிர் காவல் நிலையங்களும் இருக்கின்றன. இந்தக் காவல்நிலையங்களில் வரவேற்பாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

ஐ.டி. கம்பெனிகளிலும் நட்சத்திர ஓட்டல்களிலும் இருப்பது போன்ற ரிசப்ஷனிஸ்ட் வேலை இது. போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்ததும், நம்மை வரவேற்று நமக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது இந்த வரவேற்பாளரின் வேலை. புகார் கொடுக்கவோ தங்கள் பிரச்னைகளைச் சொல்லவோ வரும் பொதுமக்களுக்கு இந்த வரவேற்பாளர் நல்ல உதவியாய் இருக்கிறார். இந்தப் பதவி காவல் நிலையங்களுக்கு புதுசு.

மக்களைக் கவர்ந்துள்ள இன்னொரு திட்டம், சிறப்பு போலீஸ் பூத்துகளிலும் புகார்கள் பெற்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம் என்ற புதிய உத்தரவு. சிறுசிறு குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் போலீஸ் பூத்துகள் அமைக்கப்பட்டு வந்தன. ஆனால் அந்த பூத்துகளில் பொதுவாய் போலீஸார் யாரும் இருக்கமாட்டார்கள். இப்போது அந்த நிலை மாறிவிட்டது. எல்லா பூத்துகளிலும் மூன்று ஷிப்டுகளில் போலீஸ். அதுமட்டுமல்ல அவர்கள் மக்களின் புகார்களை பதிவும் செய்கிறார்கள்.இவற்றையெல்லாம் விட மக்களை மிகவும் கவர்ந்திருப்பது மக்கள் குறை கேட்கும் திட்டம்.

``இது ஏதோ ஒப்புக்கு நடைபெறப்போகும் திட்டம் என்றுதான் நினைத்தேன். ஆனால் கமிஷனரே நேரில் வந்து குறைகளைக் கேட்கிறார். அந்தக் குறைகளுக்கு உடனடியாக நிவர்த்தியும் செய்கிறார்'' என்கிறார், பல்லாவரத்தைச் சேர்ந்த பரணி என்ற விதவைப்பெண். அவர் சொல்வதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

இந்தப் பெண்ணின் நிலத்தை யாரோ ஆக்கிரமித்துவிட, உடனடியாக அந்தப் பகுதி இன்ஸ்பெக்டரிடம் வாக்கி டாக்கியில் பேசி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் ஜாங்கிட். அன்றே அந்த விதவையின் நிலம் மீட்கப்பட்டது.

இன்னொரு சம்பவம். சேலையூர் இன்ஸ்பெக்டர், பணம் வாங்கிக்கொண்டு பயங்கர குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக சாதாரண வழக்குகளை பதிவு செய்திருக்கிறார். இந்த புகார் ஜாங்கிட்டிடம் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக விசாரணை செய்து, இன்ஸ்பெக்டரைக் கடுமையாக எச்சரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்தார்.

``இதெல்லாம் எங்களுக்குப் புதுசா இருக்கு சார். போலீஸ் இப்படிலாம் கூட இருப்பாங்களான்னு ஆச்சர்யமாக இருக்கு'' என்கிறார் குமரன் என்கிற அப்பகுதி பொதுஜனம்.

பொதுமக்களுக்கு மட்டுமல்ல, காவலர்களுக்கும் குறை கேட்பு தினம் வைத்திருக்கிறார் கமிஷனர் ஜாங்கிட். அந்நாளில் போலீஸார் தங்கள் பிரச்னைகளைச் சொல்லி அதற்கு தீர்வு பெற்றுக்கொள்ளலாம்.

எப்படி இத்தனை மாற்றங்களைச் செய்ய முடிந்தது. கமிஷனர் ஜாங்கிட்டைக் கேட்டோம்.

``நான் இங்கு புதிய கமிஷனராக பதவியேற்றபோது சொன்னது நான்கு விஷயங்கள். நேர்மையான மற்றும் ஒளிவு மறைவற்ற நிர்வாகம், மக்கள் பிரச்னையில் துரிதமான மற்றும் நடுநிலைமையான நடவடிக்கை, சட்டவிரோத செயல்கள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் போக்குவரத்து சீராக்குதல். இதில் முதல் மூன்று விஷயங்களில் இதுவரை எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் பொதுமக்களும் சரி, போலீசாரும் சரி திருப்தியாக உள்ளனர். தவறு செய்யும் அதிகாரிகள் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கைகளால் மற்ற நேர்மையான அதிகாரிகள் முழுமனதுடன் ஒத்துழைப்புத் தருகின்றனர். அவர்கள் இப்போது பெருமையுடனும் புதிய மரியாதையுடனும் பணியாற்றுகிறார்கள். போக்குவரத்து பிரச்னைகளையும் விரைவிலேயே சரி செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்கிறார் ஜாங்கிட் உறுதியான குரலில். இத்தனை செய்த ஜாங்கிட் இதைச் செய்துவிடமாட்டாரா?

ஜாங்கிட்டுக்கு ஒரு சபாஷ் போட்டுவிட்டு வந்தோம்.

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

27D

வாராரு ஆட்டோகாரரு....