சென்னை அலைவரிசை

முன்பெல்லாம் வானொலி என்ற சொல்லைக் கேட்டால் கோவை வானொலியும் திருச்சி வானொலியும் கொர கொர ஒலிபரப்போடு ஒலிக்கும் இலங்கை வானொலியும் சென்னையின் முதல் அலைவரிசையுமே நினைவுக்கு வரும்.இது சென்னைக்கு முதன்முதலில் பொறியியல் கல்லூரியை தேர்ந்தெடுக்க வந்தபோது மாறியது.சென்னை சென்டரலில் இறங்கி அப்பாவின் கையைப்பிடித்தபடி பாரிமுனை வரை நடந்தேச் சென்றிருக்கிறேன்.அப்படி நடந்துச் சென்ற போதுதான் பாதையோரம் வாழும் மக்களின் காதருகில் கிசுகிசுத்தபடி சென்னை அலைவரிசை அறிமுகம்.ஒரு நாள் மட்டுமே அப்போது சென்னையில் இருந்தாலும் சென்னை அலைவரிசை மனதில் பசைப்போட்டு ஒட்டிக் கொண்டது.7.00 முதல் 7.30 மணிவரை & 8.30 முதல் 9.00 மணிவரை மீண்டும் மாலை 5.30 மணிக்கே தமிழ் பாடல்கள் என கோவை அலைவரிசை கேட்டு நேரம் குறித்து சென்னை முதல் அலைவரிசை,திருச்சி அலைவரிசை,இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் வழியே பாடல்கள் கேட்டு இரவு பி.பி.சியும் சிங்கையின் ஒலி 96.8 ம் கேட்டபடி உறங்கிப்போவனுக்கு நாள் முழுவதும் பாடல்கள் ஒலிபரப்பும் சென்னை அலைவரிசை பிடித்துப்போனதில் அதிசியம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.



அண்ணா பல்கலை கழக மரத்தடியில் அமர்ந்திருந்து காத்திருந்தபோது அப்பாவிடம் ஏக்கமாய் சொன்னது இன்னும் நினைவிருக்கிறது.சென்னையில் செட்டில் ஆகணும்ப்பா இங்கே எந்நேரமும் பாடல் ஒலிபரப்பு இருக்கிறது அதுவும் இரு அலைவரிசை.அப்பா, சிரிப்பை தவிர வேறேதும் பதிலாய் தரவில்லை.கல்லூரி முடித்து வேலைத் தேடி சென்னைக்கு கே.பி.என் இல் பயணம் செய்தநாளில் வேலை பற்றிய கவலையில் தூக்கம் வார அதிகாலையில் தாம்பரம் தொட்டவுடன் தேடியது நோக்கியா 2300 வழியே சென்னை எப்.எம் களைத்தான்.சென்னையில் கல்லூரி நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி இருந்த-இருக்கும் இவ்வநேக நாட்களில் சுப்ரபாதம் மிர்ச்சி சுசியின் கொஞ்சல் மொழியே.வானொலியில் அறிமுகமாகி திரைப்படம் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல சிகரம் தொட்டவர் சுசி என்றால் மிகையல்ல.சொல்லப்போனால் அறை நண்பன் சுசியின் கல்யாண நாளன்று அழுதுகொண்டே இருந்தான்,அவ்வளவுக்கு இளைஞர்களை பைத்தியம் ஆக்கியிருக்கிறது சுசியின் குரல்.



அடுத்ததாக யாழ்சுதாகரின் யாழின் இசையென இனியதமிழ் வழியும் சூரியன் பண்பலை.இரவு நேரங்களில் யாழின் இனியகுரலில் இனியகவிதைகளுடன் இனியபாடல்களை கேட்படி உறங்கிப்போன நாட்களினை கணக்கில் கொள்ளுதல் கடினம்.



இதனிடையே கேட்க ஆசைப்பட்ட சென்னை அலைவரிகள் இரண்டும் கேட்கப்படமலேயே இன்னும் இருக்கிறது.அதிக ஆர்பாட்டம் கவனிப்பு இல்லை என்றாலும் உள்ளங்களை கவர்ந்து இழுக்கும் சில நல்ல செய்திகள் அகில இந்திய பண்பலைகளில் இருக்கத்தான்
செய்கின்றன.விடுகதைப் போட்டிகளும் புதிர்ப்போட்டிகளும் , சிரிப்பு வெடிகளும் , செய்திச் சுருக்கங்களும் மாலையில் மார்கெட் நிலவரமும் எப்.எம் கோல்டில் கிரிக்கெட் நேரடி வர்ணனைகளும்.இது தவிர சில நேரங்களில் இந்திப்பாடல்களும்.சென்னை வானவில் (ரெயின்போ) பண்பலை, எப் எம் கோல்ட்களில் இரவு நேரங்களில் பழைய சிவாஜி,எம்.ஜி.ஆர் காலத்துப்பாடல்களை கேட்டபடி படுத்திருத்தல் இனிய அநுபவம்.





இதற்கிடையே சென்ற சனவரியில் ட்ராயிடம் சென்னையில் பண்பலை அமைக்க அனுமதிக் கேட்டு எட்டு நிறுவனங்கள் விண்ணப்பித்து ஆறு நிறுவனங்கள் அநுமதி பெற்றிருக்கின்றன.அவற்றில் மூன்று சமீபத்தில் பரபரப்பாய் ஒலிபரப்பை தொடங்கிய ஸ்டார் நிறுவனத்தின் ரேடியோ சிட்டி,அம்பானியின் ஆட்லேப்சின் பிக் எப்.எம் மற்றும் தினத்தந்திநாளிதழின் ஹலோ எப்.எம்.

இதுபோக அண்ணா எப்.எம் , லயலோ கல்லூரி எம்.எம் வைசிநவ் கல்லூரி இக்னோவின் கியான்வாணி என கல்வி நிறுவனங்களின் கம்யூனிட்டி எப்.எம் தனி.தெருவோரம் வசிப்பவர்களுக்கு , பீச்சில் வியாபரம் செய்பவர்களுக்கு , டீக்கடை , பெரியமனிதர்களின் கார்கள் என எல்லா இடங்களிலும் பேதம் பார்க்காமல் ஒலிக்கிறது.

எத்தனை அலைவரிகள் இருந்தாலும் இனிமையான பாடல்கள் ஒலித்தாலும் காதை நாராசமாக கிழித்துத் தொங்க காயப்போடும் ஆங்கில கலப்பும் அதிகப்படியான கொஞ்சல்களும் சகிக்கமாட்டாமல் வெறுப்புக்கள் சில சமயம் உருவாகத்தான் செய்கின்றன.இதில் அநேக அறிவிப்பாளர்களுக்கு ழ,ல,ள ர,ற வேறுபாடே தெரிவதில்லை.

இன்னொரு புறம் காதல் காதல் (சூரியன்) , காதல் டாக்டர் (ரேடியோ மிர்ச்சி) என்ற பெயரில் அட்டகாசம் வேறு.இதில் ஒரு தலை காதலர் ஒருவர்
தொலைப்பேசியில் ஒருப் பெண்ணின் பெயரைச் சொல்லி பேசினால் அப்பெண்ணில் வீட்டில் அப்பெண்ணுக்கு நிகழும் அவமானம் குறித்து இவர்கள்
கவலைப்படுகிறார்களா என்பது பெரிய கேள்விக்குறயே!?

இவர்கள் இப்படி என்றால் சமீபத்தில் வந்த பிக் எப் எம் கேவலத்தை அரங்கேற்றுவது வேறுவகையில் 'இரகசிய சிநேகிதி' என்ற பெயரில் "நான் போதையில்
இருந்தபோது மூன்று பேர் என்னை கற்பழித்துவிட்டார்கள்,நல்ல வேளை நான் கர்ப்பமாகவில்லை" , கள்ளக்காதல் உறவுகளின் விளக்கங்கள் கேட்டால் 'இரகசிய சிநேகிதியாம்'.இது முழுக்க முழுக்க கலாச்சார சீர்கேடு செய்யும் நடவடிக்கைகள்.குஷ்புக்கு செருப்பெடுத்தவர்கள் இவைகளை கண்டுகாணமல் இருப்பது,ஏனோ?

அலைவரிசைகள் இனிய பாடல்கள் தவிர்த்து இனி எவ்வளவோ செய்யலாம்.இப்போதைக்கு செய்தி ஒலிபரப்புக்கு தனியாருக்கு அநுமதி இல்லை
என்றாலும்.பண்பலைகள் உபயோகமான பல செய்திகளை தரலாம் பாடல்கள் இடையில்.உதாரணம் : வெளியூர் பயணிகளுக்கு சென்னைப் பற்றிய தகவல்கள்,எது எங்கே கிடைக்கும் என்பன போன்ற தகவல்கள் - இது அவர்களுக்கு விளம்பரம் போல கூட அமையும்.சிறுவர்களுக்கு கதைச் சொல்லி நிகழ்ச்சிகள்.சிறுவர்களே நேரில் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகள்.சென்னையில் நிகழும் முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் இப்படியாக.நிச்சயம் ஒரு நாளை நாம் விரும்பும் மாற்றம் வரும் என நம்புவோம் அதுவரை சென்னை அலைவரிசைகளோடு இணைந்திருப்போம்.

சென்னை மக்களைப் பொறுத்தவரை சுவாசிப்பது வெறும் காற்றை அல்ல.காற்றுடன் கலந்துவிட்ட இசை ஒலிஅலைகளை.

சென்னை அலைவரிசை பட்டியல்:



கொசுறு : இன்னும் சீக்கிரம் வர இருப்பவை மூன்று பண்பலை அலைவரிசைகள்.

Comments

வணக்கம் ப்ரியன்

வானொலி கேட்பதே ஒரு சுகானுபவம் தான், நல்லதொரு பதிவு இட்டிருக்கிறீர்கள்.
இதோ என் அனுபவம்

http://kanapraba.blogspot.com/2006/09/blog-post.html
வணக்கம் பிரியன்..நன்றாக இருந்தது பதிவு..இன்று ஒரு தகவல் மாதிரி வானொலி நிகழ்ச்சிகளின் தகவல்கள் நன்று...............
நிறைய அன்புடன்
வீரமணி
அருமையான பதிவு ப்ரியன்.

எனக்கும் நோக்கியா 2300 ரொம்ப பிடிக்கும். இன்னமும் அதை தான் வைத்திருக்கிறேன்.

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

வாராரு ஆட்டோகாரரு....

27D