சென்னை சங்கமம் - நேரடி ரிப்போர்ட

சென்னை சங்கமம் – பறையடி மற்றும் கோலாட்டம்!

பெப்ருவரி 21 அன்று மாலை சென்னை கோட்டூர்புரத்தில் மாநகராட்சியால் புதியதாக அமைக்கப்பட்ட பூங்காவில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோலாட்டமும், பறையடியும் கோலாகலாமாக நடந்தது. அதற்கு முன்பாகவே புலிவேஷம் கட்டியவர் கலக்கிக் கொண்டிருந்தார். பூம் பூம் மாடு போன்று மனிதர்களே வேடம் அணிந்து குழந்தைகளை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள்.

எதிர்பார்ப்புக்கு மாறாக மக்கள் பெரும் கூட்டமாக கூடியிருந்தார்கள். சாலையோர சிறிய பூங்காவான அதிலேயே சுமார் 300 முதல் 350 பேர் வரை கூடியிருந்து நிகழ்ச்சிகளை ரசித்தார்கள். சுமார் 100 முதல் 150 குழந்தைகள் வரை வந்திருந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தார்கள்.

கோலாட்டம் என்பது நாம் சினிமாவில் பார்த்து ரசிக்கும் "தாண்டியா" நடனம் போல இல்லாமல் மிக மிக வித்தியாசமாக இருந்தது. 20 வீரர்கள் வட்டமாக நின்றுக் கொண்டு சுமார் இரண்டரை அடி நீளம் கொண்ட மூங்கில் கழி வைத்து விளையாடினார்கள். இவர்களது ஆட்டத்துக்கேற்ப ஒரு கலைஞர் "உடுக்கை" எனப்படும் இசைக்கருவியை அசுரத்தனமாக வாசித்தார்.

இது வெறும் நடனமாக இல்லாமல் கோல் சண்டை போலிருந்தது. 20 பேரும் ஒருவரையொருவர் கோலால் அதிவேகமாக தாக்கிக் கொண்டனர். அப்போது மூங்கில் கழிகள் மோதும் சத்தம் சரியான "Beat"ல் டக், டக் என சீரான ஒலிச்சீராக அமைந்தது. வீரர்கள் அனைவரும் வெள்ளை முழுக்கை பனியனும், வேட்டியும் அணிந்திருந்தனர். சுமார் 20 நிமிடம் அதிவேகத்தோடு இந்த ஆட்டம் நடைபெற்றது. பங்கு பெற்றவர்கள் அனைவரும் 18 முதல் 25 வயது வரை இருந்த வாலிபர்களே.

அடுத்ததாக தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான பறையடி நிகழ்ந்தது. சுமார் 20 கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். 10 பேர் ஒரு புறமும், 10 பேர் மறுபுறமும் எதிர் எதிராக நின்றுக் கொண்டு பறையடித்தார்கள். அவர்களுக்கு இடையே சுமார் 10 அடி இடைவெளி இருந்தது. இந்த அணிவரிசைக்கு இருபுறமும் இரண்டு நையாண்டி மேளக் கலைஞர்களும் மேளம் இசைத்துக் கொண்டிருந்தார்கள்.

பறையடித்துக் கொண்டே மெதுவாக நடனம் ஆடியபடி இந்த வரிசையிலிருந்து அந்த வரிசைக்கு கலைஞர்கள் மெதுவாக இடம்பெயர்ந்தனர். இவர்கள் ஒரே சீராக ராணுவ அணிவகுப்பு போல இடம்பெயர்ந்தது கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. நேரம் செல்ல செல்ல பறையின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக ஒரே சீராக உயர்ந்து வந்தது.

ஒரு கட்டத்தில் அந்தப் பகுதியே அதிரும் வண்ணமாக பறை ஒலியும், நையாண்டி மேள ஒலியும் உச்சஸ்தாயியில் ஒலித்தது. அப்போது பறையடித்த கலைஞர்களும் இசையின் வேகத்துக்கேற்ப சுனாமி வேகத்தில் சுழன்று ஆடினார்கள். அதிவேகமாக ஆடியதால் சோர்வு அடையும் கலைஞர்களுக்கு ரெஸ்ட் கொடுக்கும் விதத்தில் 10 பேர் நடனமாடும்போது 10 பேர் அமைதியாக பறையடித்தப் படியுமாக ஒரு டெக்னிக் அவர்களுக்குள் இருந்தது. இவர்களின் நிகழ்ச்சியை மேற்பார்வை செய்த பயிற்சியாளர் அவ்வப்போது விசில் அடித்து இவர்களுக்கு சிக்னல் செய்து கொண்டிருந்தார். நையாண்டி மேளம் இசைக்கும் கலைஞர்கள் நொடிக்கு 5 முறையாவது மேளத்தை தட்டியிருப்பார்கள். அவ்வளவு வேகம்!

மேனாட்டு இசை தான் தலைசிறந்தது என்று வாதாடுபவர்கள் இந்நிகழ்ச்சியை கண்டிருந்தால் தமிழகத்தின் பாரம்பரிய இசையின் மகத்துவத்தை கண்டுணர்ந்திருப்பார்கள். மேனாட்டு இசை முறைகளான ராக், ராப் இசை நிகழ்ச்சிகளை விட மெட்டும், ஒலியளவும் இந்நிகழ்ச்சியில் சிறப்பாக அமைந்திருந்தது. ராக் இசை நிகழ்ச்சியின் போது வெளிப்படும் சத்தம் ஒரு ஜெட் விமானத்தின் சத்தத்தை விட அதிகமாக இருக்கும் என்று ராக் ரசிகர்கள் கூறுவார்கள். எந்தவிதமான ஒலி பெருக்கும் ஆம்ப்ளிபயர்களின் வசதி இல்லாமலேயே இனிமையான பெரும் சத்தத்தை பறை மற்றும் நையாண்டி மேளம் மூலமாக இசைக்க முடியும் என்பதை நேற்று நேரில் கண்டுணர்ந்தேன்.

பறையடித்த வீரர்கள் கறுப்புக் கலரில் டீ-சர்ட்டும், வெள்ளை வேட்டியும் அணிந்திருந்தனர்.

நிகழ்ச்சியை காண ஹாலந்து நாட்டில் இருந்து ஒரு ஐரோப்பிய தம்பதிகள் தங்கள் குழந்தைகள் இருவருடன் வந்திருந்தனர். சென்னை சங்கமம் என்ற இந்த நிகழ்ச்சியை காணமட்டுமே தாங்கள் ஐரோப்பாவில் இருந்து வந்ததாக சொன்னார்கள். கலைஞர்கள் இசைக்கும் இசைக்கருவிகளின் பெயரை ஆர்வமாக கேட்டுத் தெரிந்துக் கொண்டார்கள். உங்கள் நாட்டின் பாரம்பரிய இசை மிகச் சிறப்பானதாக இருக்கிறது. நடனமும் அருமை என்று கலைஞர் ஒருவரிடம் ஆங்கிலத்தில் சொன்னார்கள். அக்கலைஞருக்கு ஆங்கிலம் தெரியாது என்றாலும் ஏதோ பாராட்டுகிறார்கள் என்று புரிந்து கொண்டு தமிழில் "நன்றி" என்று சொன்னார்.

ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் எழுந்த கரகோஷம் விண்ணை எட்டியது. பார்வையாளர்களின் அபரிதமான வரவேற்பை அக்கலைஞர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. கைத்தட்டல் எழுந்தபோது அவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அதை எடுத்துக் காட்டியது.

பூங்கா முழுவதுமே குழந்தைகளின் அராஜகம் தான். பறையடி முடிந்ததுமே ஒரு சுட்டிக் குழந்தை அந்த இசைக்கருவியை வாங்கித்தரும்படி தன் தந்தையிடம் அடம்பிடித்துக் கொண்டிருந்தது. அந்தக் கருவியை வைத்திருந்த கலைஞர் குழந்தை அருகில் வந்து குச்சியை கையில் கொடுத்து அடிக்கச் சொல்லி விளையாடிக் கொண்டிருந்தார். அடித்து முடித்ததுமே பறையைத் திருப்பித் தரமாட்டேன் என்று அக்குழந்தை அடம்பிடிக்க கலைஞர் தர்மசங்கடமாக நெளிந்தது செம நகைச்சுவை.

நிகழ்ச்சி முடிந்ததுமே குழுவில் இருந்த ஒருவர் நிகழ்ச்சி சுமார் அரைமணிநேரம் தாமதமாகத் தொடங்கியதற்காக அங்கே காத்துக் கொண்டிருந்த குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டார்.

மேலும் அவர் ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு சிறு பாடல்பாட குழந்தைகளையும் சேர்ந்து பாட வேண்டிக் கொண்டார்.

"ஒரு கை தட்டும்போது
ஓசையே இல்லை!
பத்து கை சேர்ந்தபோது
யாருமே இல்லை!
சின்னமாடு நாலு சேர்ந்தபோது
சிங்கம் கூட மிரண்டு ஓடிச்சாம்!"

என்று உச்சஸ்தாயியில் அவர் பாட குழந்தைகளும் சேர்ந்து பாடினார்கள். அங்கிருந்த ஹாலந்து நாட்டு தம்பதிகளும் மழலைத் தமிழில் அவர்களோடு சேர்ந்து பாடினர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டில் சில குறைபாடுகள் இருந்ததாக தெரிந்தது. குறைபாடுகள் என்று சொல்ல முடியாது. முதல்தடவை நடத்துவதால் இப்பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம். நம் ஊர் பூங்காக்களின் ஒளிவசதி உங்களுக்குத் தெரிந்திருக்கும் J மிகக்குறைந்த வெளிச்சத்தில் அந்தக் கலைஞர்கள் Performance காட்டவேண்டியதாக இருக்கிறது. இதனால் நிகழ்ச்சியை படமும் எடுக்க முடியவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்காக பிரத்யேகமான அதிக ஒளி தரும் மின்விளக்குகளை பொருத்த வேண்டும்.

மேலும் நிகழ்ச்சி நடந்த இடத்தில் சிறு சிறு சரளைக் கற்களாக இருந்ததால் நடனம் ஆடும் கலைஞர்கள் (வெறும் காலோடு ஆடுகிறார்கள்) கல் காலில் குத்தி சிரமப்பட்டார்கள். இதுபோல நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் ஆற்று மணலை பரப்பி வைக்கலாம்.

நல்லவேளையாக திடீர் கடைகள் எதுவும் முளைக்காமல் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பார்த்துக் கொண்டார்கள். இல்லாவிட்டால் வேர்க்கடலை தொடங்கி செல்போன் கடைவரை முளைத்து நிகழ்ச்சியை ரசிக்க செய்ய விடாமல் கடலை போட்டிருக்க வேண்டியது தான். எனினும் குழந்தைகள் அதிகமாக கூடும் இடம் என்பதால் பஞ்சு மிட்டாய், சர்க்கரைப் பாகில் பொம்மைகள் செய்து தயாரிக்கும் மிட்டாய் போன்ற கடைகளை நிகழ்ச்சி அமைப்பாளர்களே நடத்தலாம்.

சென்னபட்டினத்துக்காக - லக்கிலுக்

Comments

மக்களுக்காக மக்களால் ஒரு கலைநிகழ்ச்சி நடக்கிறது. பெருமகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்போது சென்னையில் இல்லாமற்போனதற்கு வருந்துகிறேன்!

(ஆச்சரியமா இருக்கே, நாந்தான் மொதல்ல:))
"சென்னை சங்கமம்" தொடர்பாக வரும் பதிவுகள் யாவற்றையும்
"சென்னபட்டின"த்தில் திரட்ட முடியுமா?

"சென்னை சங்கமம்"மீது
"சென்னபட்டினம்" உரிய நேரத்தில்
உரிய கவணத்தை செலுத்தத்தவறியதை இப்படி ஈடுசெய்யலாமே!
//"சென்னை சங்கமம்" தொடர்பாக வரும் பதிவுகள் யாவற்றையும்
"சென்னபட்டின"த்தில் திரட்ட முடியுமா?//

முயல்கிறோம் சிவ(ஞானம்ஜி?)

எங்களுடைய பதிவுகளும் வரும்... கொஞ்சம் தாமதமாக..

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

வாராரு ஆட்டோகாரரு....

27D